( வி.ரி.சகாதேவராஜா)

அக்கரைப்பற்று மஹ்ழறதுல் காதிரிய்யா பள்ளிவாசல் நூறுல் இர்பான் அறபுக்கல்லூரி வளாக ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்ற மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை (17) மாலை 03 மணிக்கு ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வும் – 2026 எனும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஓய்வுநிலை விஞ்ஞான பிரிவுக்கான உதவி கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. அப்துல் வாஹித் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில், ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றத்தின் போசகர் முகல்லம் அப்துல் ஸமத் ஆலிம் அப்துல் மஜீத் (மக்கத்தார் (றஹ்) மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி. மேனகா புவிக்குமார் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வில், முக்கிய நிகழ்வாக அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தராக இருந்து கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராகப் பதவி உயர்வு பெற்றமைக்காக தேசகீர்த்தி ஏ.எல். தௌபீக் (JP) அவர்கள் இதன்போது  பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம் அதாஉல்லா, அக்கரைப்பற்று மஹ்ழரதுல் காதிரிய்யா பள்ளிவாசலின் தலைவரும் ஓய்வு நிலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஏ.எம். நவாஸ், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் வை. றாசித், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மொழித்துறை விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக் ஆகியோர் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாகக் கலந்து சிறப்பிக்கின்றனர்.