சுற்றுலா பணியக நிதி மோசடி வழக்கு
பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதி மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளுக்காக, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் நிதி பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அந்நாள் பணியக தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக, இன்று (29) குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட மனு மூலம் நீதிமன்றில் அறிவித்ததைத் தொடர்ந்து, நீதவான் பசந்த அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

