சாய்ந்தமருது பொலிஸ் நிலைய ஸ்தாபக பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீனுக்கு உயர் கௌரவம்
பாறுக் ஷிஹான்
சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஸ்தாபக பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் புதன்கிழமை
( 2026.04.23) தனது 38 வருட கால பொலிஸ் சேவையை பூர்த்தி செய்து ஓய்வுபெற்று செல்கிறார்.
இவரது உன்னத சேவையை பாராட்டி அம்பாறை பொலிஸ் தலைமையகத்தில் அம்பாறை மாவட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினதும் ஏற்பாட்டில் விஷேடமாக கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சாய்ந்தமருது மண்ணை பிறப்பிடமாகக் கொண்ட இவர் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தை உருவாக்கியதுடன் பொலிஸ் நிலையத்தின் முதலாவது நிலையப் பொறுப்பதிகாரியாக 5 வருட காலம் சிறப்பாக கடமையாற்றியுள்ளார்.
1988 ஆம் ஆண்டு போர்க் காலத்தில் துணிச்சலுடன் பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட எஸ்.எல். சம்சுதீன் அவர்கள் காரைதீவு பொலிஸ் காவலரணில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது 1989.11.17 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளினால் அந்த காவலரண் சுற்றி வளைக்கப்பட்டு, அங்கு கடமையாற்றிய 38 முஸ்லிம் பொலிஸாரும் ஒட்டு மொத்தமாக சுடப்பட்டபோது இவர் மாத்திரம் பலத்த காயங்களுடன் உயிர்தப்பியமையும் ஏனைய 37 முஸ்லிம் பொலிஸாரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டமையும் வரலாற்று நிகழ்வாகும்.
எவ்வாறாயினும் பொலிஸ் சேவையில் இருந்து பின்வாங்காமல் பல பகுதிகளிலும் இவர் கடமையாற்றி வந்திருப்பதுடன் கல்முனை பொலிஸ் நிலையம் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் என்பவற்றின் பதில் பொறுப்பதிகாரியாகவும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஸ்தாபகராகவும் அதன் முதலாவது பொறுப்பதிகாரியாகவும் பதவி உயர்வு பெறுமளவுக்கு அர்ப்பணிப்பு, தியாகம், பொறுப்புணர்வுடன் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். சுஜித் வெதமுல்ல பிரதம அதிதியாகவும்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ.பி.பி. கஸ்தூரியாச்சி கௌரவ அதிதியாக கலந்து கொண்டு அவர்களது பொற்கரங்களினால் நினைவுச் சின்னம் மற்றும் பரிசுகளை வழங்கி எஸ்.எல். சம்சுதீன் அவர்களுக்கான உயர் கௌரவத்தை அளித்தனர்.
அத்துடன் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் அவர்களும் அம்பாறை, அக்கரைப்பற்று, பொத்துவில் மற்றும் மகா ஓயா உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இக்கினியாகல, தெகியத்த கண்டி, பதியதலாவ, திருக்கோவில், உஹண, தமண, பாணம, பொத்துவில், அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, சாய்ந்தமருது, பெரிய நிலாவனை, சவளக்கடை, மத்திய முகாம் மற்றும் இறக்காமம் ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.



