( வி.ரி.சகாதேவராஜா)
2000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் கதிர்காம பாதயாத்திரையை வர்த்தமானிப் பிரகடனம் செய்து ஒரு புனித யாத்திரையாகப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று வடக்கு கிழக்கில் உள்ள இந்து அமைப்புகள் நேற்று காரைதீவில் கூட்டாக இணைந்து வேண்டுகோள் விடுத்தனர்.
மேற்படி கலந்துரையாடல் நேற்று (11) சனிக்கிழமை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் தலைமையில் காரைதீவு சுவாமி விபுலாநந்தா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. காரைதீவு உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் பிரதேச செயலாளர்களான ஆர்.திரவியராஜ், ரி.ஜே.அதிசயராஜ் , உதவி பிரதேச செயலாளர்களான பி.பிரணவரூபன், ரி.திவாகர்.எம்.இராமக்குட்டி, தவிசாளர்களான சு.பாஸ்கரன், இ.ரூபசாந்தன்,ஏ.தர்மதாஸ , ஓய்வு நிலை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணக்களப்பணிப்பாளர் ச.நவநீதன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அச்சமயம் வடக்கே செல்வச்சந்நிதி தொடக்கம் தெற்கே உகந்தை வரையிலான பிரதேச ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன் வைத்தனர்.
அனைவரும் வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று ஏகோபித்த ஆதரவை தெரிவித்தனர்.
இவைகள் அம்பாறை மாவட்ட செயலகம் ஊடாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அமைச்சரவைக்கு அனுப்பி உரிய தீர்மானம் நகர்த்தப்படும் . கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.என்று இறுதியாக மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
கூட்ட ஒருங்கிணைப்பை அம்பாறை மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி மேற்கொண்டிருந்தார்.














