( வி.ரி. சகாதேவராஜா)
ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த வரலாற்று பிரசித்தி பெற்ற புகழ்பெற்ற நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 03ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 05ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
ஆலயத்தை அழகுற நிருமாணித்த, அவுஸ்திரேலியாவில் வாழும், நிந்தவூரை பூர்வீகமாக கொண்ட இராமலிங்கம் ரவீந்திரதேவன் தலைமையில் இம் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறுகிறது.
கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெறும் இப் பெருவிழாவின் தொடக்கமாக (03.04.2026) வெள்ளிக்கிழமை கிரியைகள் ஆரம்பமாகும் .
தொடர்ந்து மறுநாள் (04.04.2026) சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.
இறுதியாக (05.04.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 8.35 மணி முதல் 10.16 மணி வரையான சுப முகூர்த்த நேரத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த மகா விழாவில் விநாயகர், முருகன் மற்றும் பிற தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
தொடர்ந்து 12 தினங்கள் மண்டலாபிஷேக பூஜைகள் இடம்பெற்று சங்காபிஷேகம் 17.04.2026 இல் நடைபெறும்.
அயற் கிராமங்களின் ஆலய நிர்வாகம், பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு இறையருளைப் பெறுமாறு ஆலய பரிபாலன சபைத்தலைவர் இ.ரவீந்திரதேவன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிகழ்வு நிந்தவூர் பகுதியின் முக்கிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படுவதுடன், பக்தர்களின் பெரும் திரளான பங்கேற்பு எதிர்பார்க்கப்படுகிறது.





