3 கோடி ரூபா செலவிலான பழமையான கரைச்சைப்பால புனரமைப்பு பணிகள் இழுத்தடிக்கப்படுவது ஏன்? பொதுமக்கள் கேள்வி!
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு விபுலானந்தா
மத்திய கல்லூரி வீதியில் உள்ள சுமார் 50 வருட காலம் பழமைவாய்ந்த கரைச்சைப் பாலத்தின் 3 கோடி ரூபாய் செலவிலான புனரமைப்பு பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வருவது ஏன்? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வீதி அபிவிருத்தி திணைக்களம் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்தது.
இதற்கான பணிகள் கடந்த இரு மாதங்களுக்கு முன்னரே பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்த போதிலும், இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவது ஏன்? என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், மீன் வியாபாரிகள், பொதுமக்கள் பயன்படுத்துகின்ற இப்பாதை முன்னர் ” ஐ” திட்டத்தின் கீழ் கார்ப்பட் இடுகின்ற போது குறித்த பாலம் புனரமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அது நடைபெறவில்லை.
இது தொடர்பாக காரைதீவு பிரதேச செயலாளரிடம் கேட்டபோது அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னார்.
இழுத்தடிப்புக்கான காரணம் என்ன? இது எப்போது பூர்த்தி செய்யப்படும்? என்ற விபரங்களை சம்பந்தப்பட்டவர்கள் மக்களுக்கு தெரியப்படுத்தி மிக விரைவாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழமை வாய்ந்த இப் பாலம் இறுதி காலகட்டத்தில் எப்போது விழும்? என்ற அபாய நிலையில் இருந்ததை ஊடகங்கள் தொடக்கம் பலரும் பல கூட்டங்களிலும் கூறி இருந்த பொழுதும் அது கடந்த பத்து வருட காலம் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.
இதேபோன்று காரைதீவில் மேலும் நான்கு பாலங்கள் இருக்கின்றன .
இருந்த பொழுதிலும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் இவ்வருடம் இப் பாலத்தை மாத்திரம் புனரமைக்க திட்டமிட்டு வேலையை ஆரம்பித்து செய்து வந்த போதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.



