ஐஸ் போதைப்பொருளுடன் கல்முனையில் கைதான  இருவருக்கு  தடுப்புக்காவல் உத்தரவு

பாறுக் ஷிஹான்


ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கானது இன்று  கல்முனை நீதிமன்ற  நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில்  மன்றில்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியைச்  சேர்ந்த 28 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆந் திகதி  வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

செய்திப் பின்னணி

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் பெரும்தொகை போதைப் பொருட்களுடன் இருவர் வாகனமொன்றில் நடமாடுவதாக  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும்   D.C.D.B என அழைக்கப்படும்   அம்பாறை மாவட்ட  குற்றப்புலனாய்வு பிரிவு  கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய கல்முனை  வைத்தியசாலை ஒன்றின் அருகில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இதன் போது   61 கிராம் 800 மில்லி கிராம் ஐஸ்  போதைப்பொருள் கைத்தொலைபேசிகள்  நிறுத்தல் தராசு ஏ.ரி.எம். வங்கி அட்டைகள்  வாகனம்  ஒன்று என்பன சந்தேக நபர்கள் வசம் இருந்து மீட்கப்பட்டதுடன் குறித்த சந்தேக நபர்கள் வசிக்கும் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதிக்கும் சந்தேக நபர்கள் அழைத்து செல்லப்பட்டு அவர்களது வீடுகளும் சொதனை செய்யப்பட்டன.அத்துடன் கைதான 28 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்கள் இருவரையும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டனர் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது  கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய   அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில்  அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் – 1 சம்பத் விக்ரமரத்ன பணிப்புரைக்கமைய அம்பாறை மாவட்ட  குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகார பிரதான பொலிஸ் பரிசோதகர் எ.எச்.ஏ.எல் சத்திரசிங்க தலைமையிலான  பொலிஸ் பரிசோதகர்களான ஆர்.ஏ.டி.எச்.ரத்னாயக்க மற்றும் பண்டார உள்ளிட்டோருடன் அம்பாறை மாவட்ட   ஊழல் தடுப்புப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் மக்பூல் ,பொலிஸ் உத்தியோகத்தர்களான திசாநாயக்க, அஜீத் ,பொலிஸ் சாரதி சஜேந்திர, ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.