நாட்டில் நிலவிய வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் பயிர்களில் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையில் 80 சதவீதத்தை இந்த வாரத்திற்குள் வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் மீண்டும் விவசாயம் மேற்கொள்ள கூடிய நிலத்தின் பரப்பளவு 95,000 ஹெக்டேயர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

நவம்பர் 28 ஆம் திகதி நிலவரப்படி, விவசாயம் செய்யப்படாத நிலத்தின் பரப்பளவு 249,486 ஹெக்டேயர் காணப்படுவதுடன், 2039 ஹெக்டேயர் விவசாயம் செய்யப்படாத நிலங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் வெள்ள நிலைமைகள் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை (16) ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 600 மில்லியன் ரூபா வரவு வைக்கப்பட்டதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விவசாயிகள், அந்தப் பகுதியில் உள்ள விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளரிடமிருந்து உரிய விண்ணப்ப படிவத்தைப் பெற்று, அந்தப் பகுதியில் உள்ள விவசாய அமைப்புகளின் செயலாளர்/தலைவர், பொருளாதார மேம்பாட்டு அலுவலர் அல்லது சமுர்த்தி அலுவலர் மற்றும் விவசாய ஆலோசகர் ஆகியோரின் கையொப்பங்களுடன் உடனடியாக விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.