இயற்கை அனர்த்தத்தால் பொதுமக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதை காட்டிலும் எதிர்க்கட்சியினர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். எதிர்க்கட்சியினர் இந்தளவுக்கு கீழ்த்தரமாக செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இவர்களின் நிலைமையையிட்டு கவலையடைகிறோம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள நாவலபிட்டி – நுவரெலியா புகையிரத பாதை புனரமைப்பு பணிகளை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையை தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தால் மலையக புகையிரத பாதைகள் பாரியளவில் சேதமடைந்துள்ளன. புகையிரத பாதைகளை விரைவாக புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புகையிரத திணைக்கள சேவையாளர்கள், இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன்; சேதமடைந்துள்ள புகையிரத பாதைகள் தற்போது கட்டம் கட்டமாக புனரமைக்கப்படுகின்றன. வெகுவிரைவில் இந்த பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஜனாதிபதி விடுத்த அறிவிப்புக்கமைய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும்.இயற்கை வளங்களை அழித்து குடியிறுப்புக்களை அமைத்தால் அதன் பிரதிபலன் பாரதூரமானதாக அமையும் என்பதற்கு தற்போதைய நிலைமை ஒரு எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.
மலைகள், ஆறுகளை அண்டிய பகுதிகளில் குடியிறுப்புக்களை அமைப்பது குறித்து இனி கடுமையான திட்டங்கள் செயற்படுத்தப்படும். தற்போதைய நிலைமை எதிர்காலத்தில் தோற்றம் பெறாத வகையில் நிலையான தீர்மானங்களை செயற்படுத்த வேண்டும்.
அனர்த்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாகியுள்ளதை காட்டிலும் எதிர்க்கட்சியினர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். ஊடக சந்திப்புக்களை நடத்திக் கொண்டு குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் மீது அக்கறை இருக்குமாயின் எதிர்க்கட்சியினர் ஊடகங்களுக்கு மத்தியில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்காமல் மக்கள் மத்தியில் சென்று அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எதிர்க்கட்சியினர் இந்தளவுக்கு கீழ்த்தரமாக செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.இவர்களின் நிலைமை கவலைக்குரியது என்றார்
