செட்டிபாளையத்தில் அன்னாபிஷேக வழிபாடும் பௌர்ணமி கலை விழாவும்
( வி.ரி. சகாதேவராஜா, செ.பேரின்பராசா)
செட்டிபாளையம் சிவன் ஆலயத்தின் கீழ் இயங்கும் செட்டிபாளையம் திருவருள் நுண்கலை மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை (05) மாலை 6.00 மணிக்கு பௌர்ணமி கலை விழா திருவருள் நுண்கலை மன்ற தலைவரும் ஆலய தலைவருமான மு.பாலகிருஷ்ணன் தலைமையில் செட்டிபாளையம் சிவனாலய உள்ளக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக முன்னைநாள் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் சி. மனோகரன் தாளங்குடா கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் ச.வேல்சிவம் மற்றும் முன்னைநாள் நடனபாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி வனிதா தனசேகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் திருவருள் நுண்கலை மன்றம், சித்தி விநாயகர் அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் தன்னார்வ பெற்றோர்களது பிள்ளைகளது கலை ஆற்றுகை நிகழ்வுகள் காண்போரைக் கவரும் வகையில் அரங்கேறியது.
இந் நிகழ்வில் கிராமமட்ட ஆலயங்களில் மற்றும் சமூக நல அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், கலைஞர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கருவறையிலே வீற்றிருக்கும் மூலவருக்கு அன்னாபிஷேகம் இடம் பெற்று விசேட பூசை மற்றும் அன்னதான நிகழ்வுகளுடன் திருவருள் நுண்கலை மன்ற செயலாளர். ம.புவிதரனின் நன்றியுரைடனும் விழா இனிதே நிறைவு பெற்றது.





