சர்வதேச சிறுவர் தினத்தில் மிகவும் குடியிருப்புமுனை மாணவர்களுக்கு “ஒஸ்கார்” அமைப்பு  கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு!

(வி.ரி.சகாதேவராஜா)

சர்வதேச சிறுவர் தினத்தில் அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய  நாவிதன்வெளி அன்னமலை குடியிருப்புமுனை சண்முகா  பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களையும் ஒலி பெருக்கி சாதனத்தையும் வழங்கி வைத்தது.

“ஒஸ்கார்” ( AusKar) அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதனின்  வழிநடத்தலில், உபதலைவர்   அ.மகேந்திரன் ஒழுங்கமைப்பில், “ஒஸ்கார்” அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர் அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களத்தின் கணனி வலையமைப்பு பொறியியலாளர் சோமசுந்தரம் பாலச்சந்திரன்  இத் திட்டத்திற்கு பூரண நிதியுதவி வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வு , குடியிருப்புமுனை சண்முகா பாடசாலையில் இன் று ( 03)  வெள்ளிக்கிழமை அதிபர் பி.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக  ஒஸ்கார் அமைப்பின் இலங்கைக்கான செயற்பாட்டுக்குழுத் தலைவர், ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளரும், பிரபல ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா  கலந்து சிறப்பித்தார். பாடசாலை மேம்பாட்டு திட்ட உத்தியோகத்தர் ஆர்.பிரகதீஸ்வரனும் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் அனைத்து மாணவர்களுக்கு பாடசாலை பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.  மேலும் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க தரமான ஒலிபெருக்கி சாதனத்தையும் அதிதிகள் வழங்கி வைத்தனர்.

அதேவேளை பாடசாலை வளாகத்தில் உள்ள பாலர் பாடசாலை சிறுவர்களுக்கு சிறுவர் தின பரிசுப்பொருளும் அன்பளிப்பு செய்யப்பட்டன.நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.