ஒலுவில் பகுதியில் குழந்தை மீட்பு  – பெற்றோருக்கு  விளக்க மறியல் விதிப்பு
பாறுக் ஷிஹான்



ஒலுவில்  பகுதியில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டட  குழந்தையின் தாய் – தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்  03 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு புதன்கிழமை (1) அக்கரைப்பற்று நீதிமன்ற  நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குழந்தையை  பிரசவித்து  அதனை அநாதரவாக  கைவிட்டமை தொடர்பில்  கைதுசெய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை   விளக்க மறியலில் வைக்கமாறு உத்தரவிடப்பட்டார்.

மேலும்  17 வயதுடைய குறித்த பெற்றோர்கள்  திருமணத்துக்கு அப்பாலான உறவின் மூலம்  மீட்கப்பட்ட பெண் குழந்தையை   கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) பெற்றெடுத்திருந்தனர்.

இந்தப் பின்னணியில் குழந்தையின் தந்தை மற்றும் தாய் உள்ளிட்டோரை  கைது செய்த பொலிஸார் அவர்களை  அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது   இருவரையும்  ஒக்டோபர் மாதம்  03 ந் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
 
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தற்போது  குறித்த குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில்  விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடபட்ட குழந்தையின் தாயும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.