வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழினவழிப்பு,வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர் குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் எனும் தொனிப் பொருளுடன் நீதிக்கான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை வடக்கில் செம்மணியிலும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக இன்று (1) நிறைவு செய்துள்ளனர்.

இப்போராட்டம் 5 ஆவது நாளாக இன்றைய தினம் (1) திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க உறவுகளுடன் அதிகளவிலான பொதுமக்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செபஸ்தியான் தேவி , மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி,அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தாமோதரம் பிரதீவன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.