கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க காணாமல் போனதாகக் கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் பல தரப்பினரும் நாளை (27) கதிர்காமம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சோமிபால டி. ரத்நாயக்காவை காணவில்லை என அவரது மகள்களும் மற்றுமொரு குடும்ப உறவினரும் கதிர்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தந்தை சமீபத்தில் தனது மூத்த சகோதரி ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதன் பின்னர் இதுவரை அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் மகள்கள் பொலிஸில் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், முறைப்பாட்டாளரும், பிரதிவாதிகளும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இன்று பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டனர்.

எனினும் நாளை கதிர்காமம் பொலிஸ் நிலையத்திற்கு வரவுள்ளதாக பிரதிவாதிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

பிரபல பாதாள குழு உறுப்பினரான அங்கொட லொக்காவின் மனைவியால் கதிர்காமம் ஆலயத்திற்கு வழங்கிய 38 பவுண் தங்க தகடு காணாமற் போனதையடுத்து,  ஆலயத்தின் தலைவர் பிரதான பூசகர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தை விசாரணை செய்த குழுவினர், கதிர்காமம் ஆலயத்தின் களஞ்சியசாலை காப்பாளராக இருந்த சுட்டி கபுரல என்பவரை கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர்.