பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தின் நிதியனுசரனையில்
ஒருநாள் இயற்கை முறை வீட்டுத்தோட்டச் செயலமர்வு

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தின் நிதியனுசரனையில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தினால் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 78 மாணவர்களுக்கான ஒரு நாள் இயற்கை விவசாய வீட்டுத் தோட்டச் செயலமர்வு நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவர் – வினோஜ்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இது பாடசாலையின் அதிபர் – தயாகரன் , பிரதி அதிபர் – சசிகரன் ஆகியோரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் நடைபெற்றது.

இதன் போது பிரதம அதிதியாக மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி – முபாரக் அலி , சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் – பரமதயாளன் , விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் ரிப்கான் , கிழக்கிழங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் தலைவரும் சிவநெறி அறப்பணி மன்றத்தின் தலைவருமான – சைவப் புலவர் கஜேந்திரா , கிழக்கிழங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் உதவிச் செயலாளர் – சனாதனன் , சம்மாந்துறை இளைஞர் சேவை அதிகாரி – சமீர் , அட்டாளைச்சேனை இளைஞர் சம்மேளனத்தின் செயலாளர் – சகரான் , சம்மாந்துறை எச்.என்.வீ வங்கியின் நுன் நிதி முகாமையாளர் சஞ்ஜீவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இச் செயலமர்வில் போது மண் பண்படுத்தல், விதைகள் நடுகை, வினைத்திறனான நீர்ப்பாசனம், வீட்டுத் தோட்ட முகாமைத்துவம், பீடைக்கட்டுப்பாடு முறைகள், நிலைபேறான வீட்டுத் தோட்ட முயற்சியாண்மை போன்ற செயற்பாடுகளை மாணவர்களுக்கு செயன்முறையாக காட்டப்பட்டன. இதனை சுலக்ஷன், மயூராபதி, மோகன்தாஸ் மற்றும் அகனாப் ஆகியோர் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர். இதன் போது 78 மாணவர்களுக்கு வீட்டுத் தோட்டம் செய்வதற்கான பயிர்கன்றுகள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டன. மக்களுக்கு யோகக் கலையின் உண்மைகளை உணர்த்த சைவ முன்னேற்றச் சங்கத்தின் மற்றுமொரு சேவையே – அறிவொளி வளையம் ஆகும். அறிவொளி வளையமானது இலங்கை பல நிலைபேறான வேலைத்திட்டங்களை மட்டுமன்றி இந்தியா, நேபாளம், உக்ரைன் போன்ற பல்வேறு நாடுகளில் மனிதநேயப் பணிகளைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.