அஞ்சலிகள்….!!!

எமது கட்சியின் மூத்த உறுப்பினரும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினருமான, திரு.தோமஸ் வில்லியம் தங்கத்துரை ஐயா அவர்கள் மறைந்தார் எனும் செய்தி மிகுந்த துயரைத் தருகிறது.

அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், எமது கட்சியின் நெடுங்கால செயற்பாட்டாளராக தன்னை நிலைநிறுத்தியதற்கு அப்பால், அம்பாறை மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட சமூக சேவையாளராகவும் ஆரம்பத்தில் அறியப்பட்டவர்.

அரசியலில் அனுபவ முதிர்ச்சி பெற்ற இவர், அம்பாறை மாவட்ட மக்களின் பிரதிநிதியாக மிகக்குறுகிய காலம் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்திருந்தாலும், அப் பதவிக்காலத்துக்கு முன்னரும் பின்னரும் மக்கள் நலன் சார்ந்தும், தமிழ்த்தேசியம் சார்ந்தும் நிறைவான பணிகளை ஆற்றியிருக்கிறார்.

இதுதவிர, தனிமனித விருப்பங்களின் அடிப்படையில் என்னை நேசித்து, எனது தனிப்பட்ட நலன்விரும்பியாகவும் அவர் தனக்கான தனியிடத்தை என்னகத்தே தக்கவைத்திருக்கிறார். தனது சீரிய சிந்தனை, நேர்த்தியான செயல்நோக்கு என்பவற்றின் அடிப்படையில் சமூக மதிப்பு மிக்க மனிதனாகவும், தன்னலம் கருதாத மக்கள் சேவகனாகவும் வாழ்ந்து மறைந்த மதிப்பார்ந்த தோமஸ் ஐயா அவர்களின் ஆன்ம இளைப்பாற்றுகைக்காக பிரார்த்திக்கும் அதேவேளை, அவரது இழப்பின் துயர் சுமந்திருக்கும் உறவுகளுக்கு எனது அனுதாபங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.

சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி.