எந்தவொரு குடிமகனும் இந்த நாட்டில் உள்ள அரசாங்க நிறுவனத்தில் சேவையை பெறும்போது, சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் அவர் தனக்கு தேவையான சேவைகளை பெற்றுகொள்ளலாம் என பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராதா விஜேகோன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரச கரும மொழிகள்

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய 2 மொழிகளும் அரசியலமைப்பில் அரச கரும மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். அந்த உரிமை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் தேசிய மொழிகளாக கருதப்படுகின்றன.

தனியான பிரிவு

ஒரு நாடு என்ற வகையில் அரச துறையில் மட்டுமன்றி வேறு எந்த பணியிலும் சிங்களம் மற்றும் தமிழ் இரண்டும் பிரதான மொழிகளாகும்.

பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் அரச கரும மொழிபாடத்தை கையாள்வதற்கான தனியான பிரிவு ஒன்று காணப்படுகின்றது.

நாட்டின் அரச கரும மொழி கொள்கையை அரசியலமைப்பில் உள்ளடக்கி அதற்கு அதி முக்கியத்துவம் வழங்குவதற்கு அரசியலமைப்பிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.