கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – எல்லை நிர்ணயமென மீண்டும் காலத்தை இழுத்தடிக்க இடமளிக்க முடியாது – அனைத்து தமிழ் தலைமைகளும் கூட்டாக ஜனாதிபதியுடன் பேச வேண்டும்.

கேதீஸ்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் 30 வருடங்களாக தடுக்கப்பட்டு வருவதுடன், அண்மைக்காலமாக இருக்கும் அதிகாரங்களும் பறிக்கப்பட்டும் வருகின்றன.

காலத்துக்கு காலம் வரும் அரசாங்கத்துடன் இனவாத முஸ்லிம் அரசியல் கும்பல்கள் எல்லை நிர்ணயம் எனக் கூறி காலத்தை இழுத்தடித்து வரும் சூழ்ச்சிகள் தொடர்கிறது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லை கல்முனை நகர் தரவைப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகின்றமை அடிப்படை என்பதும் குறிப்பிடத்தக்க ஆகும்.

மிகக் குறுகிய காலத்தில் கல்முனை வடக்கு பிரதேசத்தில் காணி அலுவலகம் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அரச இணைத்யதளத்தில் இருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலக இணைப்பு 29 கிராம சேவகர் பிரிவுகள் தொடர்பான விபரங்களும் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவ்வாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான தீர்வுகள் எட்டப்படாது மாறாக அதிகாரங்கள் பறிக்கப்பட்டமையானது கல்முனை பிராந்திய தமிழ் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தம் கருணாகரன், தவராசா கலையரசன் ஆகியோர் சில தினங்களின் முன்னர் பிரதம மந்திரியை சந்தித்து கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக தாமதியாது தீர்வை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர் இதற்கான தீர்வு வெள்ளிக் கிழமைக்கு முன்பு எட்டப்படும் என பிரதமரால் உறுதியும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 31.08.2022 இன்று சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதம மந்திரியை சந்தித்து முதலில் எல்லை நிர்ணயம் செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

எல்லை நிர்ணய விவகாரம் தொடர்பாக கடந்த காலங்களிலும் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று பல மாதங்கள் கடந்தும் தீர்வு எட்டப்படாத நிலையில் மாறி மாறி ஆட்சிகள் மாற்றங்கள் இடம்பெற்றும் இருந்தன ஆனால் தீர்வுகள் எதுவும் இல்லை.

மீண்டும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட இந்த சூழ்நிலையில் அதற்கான தீர்வை உடனடியாக வழங்குவதற்கு பதிலாக எல்லை நிர்ணயம் தொடர்பாக பேசி மீண்டும் காலத்தை இழுத்தடிக்கும் சூழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகிறது. இதற்கு இடமளியாது எல்லை நிர்ணயம் செய்வதற்குரிய முயற்சிகள் ஒரு பக்கம் இடம்பெற்றாலும் கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்கான கணக்காளரை நியமனம் செய்தல், அங்கிருந்து தூக்கப்பட்ட காணி அலுவலகத்தை மீண்டும் இயங்கச் செய்தல், அரச இணையத்தளத்தில் மீண்டும் கல்முனை வடக்கு பிரதேசத்துக்கான இணைப்பை சீர் செய்தல் என்பன அவசரமாக செய்யப்பட வேண்டிய விடயங்கள் ஆகும்.

இந்த விடயங்களை அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை நேரடியாக சந்தித்து கல்முனை பிரதேச தமிழ்,சிங்கள மக்களின் அரச நிர்வாக சேவையை சீராக பெறுவதற்குரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும்.
கல்முனை வடக்கு பிரதேசத்துக்குரிய விடயங்கள் இவ்வாறு தீர்வு இன்றி தொடர்ச்சியாக மக்களின் நியாயமான கோரிக்கை இழுத்தடிக்கப்பட்டு வருவதானது இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கும் குறிப்பிட்ட ஒரு இனத்துக்கு எதிராக அநீதி இழைக்கப்படுவதற்கும் அரசாங்கம் இடம் அளிக்கக் கூடாது. இதுவே இன்று கல்முனை மக்களின் கோரிக்கையாகும்

You missed