( வி.ரி.சகாதேவராஜா)

நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், குடிநீர் மற்றும் மின் இணைப்புக்கான நிதியுதவிகள் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (20) புதன்கிழமை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வு ​நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்  தலைமையில் நடைபெற்றது.

 பிரதேச சபை பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு திட்டத்தின்கீழ், 2026ஆம் ஆண்டிற்கான நலன்புரி வேலைத்திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் நிகழ்வில் கருத்து தெரிவித்த தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்,

 “வறுமையில் வாழும் தேவையுடைய மக்களின் கோரிக்கைகளுக்கு இணங்க, அவர்களின் நலன் கருதி  இவ்வருடம் 18 இலட்சம் ரூபாய் நிதி   வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் மக்களின் வாழ்வாதார உதவிகள், குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகள் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டார்.

​இதற்கமைய, பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு:

​மின்சார இணைப்புக்கான கட்டணம் (இலங்கை மின்சார சபை)

​குடிநீர் இணைப்புக்கான கட்டணம் (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை)

​ஆகியவற்றிற்காகச் செலுத்தப்பட்ட உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டுகள்  மற்றும் வாழ்வாதார உதவிகள் இதன்போது உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச சபையின்  உப தவிசாளர் கே. புவனரூபன், உறுப்பினர்களான கே. உதயகுமார், த.சித்திரகுமார், எம்.பி. நிவாஸ், கு. நிரோஜன், ஏ.எல்.சௌதியா ஆகியோருடன் பிரதேச சபைச் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது