மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர் விற்பனை-58 தயிர் சட்டிகள் அழிப்பு
பாறுக் ஷிஹான்
புனித நோன்பு காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர் விற்பனை செய்த வர்த்தகரை எச்சரித்த நீதிவான் சந்தேகத்திற்குரிய 58 தயிர் சட்டிகளையும் உடனடியாக அழிக்குமாறு
உத்தரவிட்டார்.
நேற்று (புதன்கிழமை) பிற்பகல் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் வழிநடத்தலில் சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வாராந்த உணவு நிலையப் பரிசோதனையின் போது தயிர் விற்பனை தொடர்பாகக் இரகசியத் தகவல் ஒன்று கிடைத்திருந்தது.
இதற்கமைய செயற்பட்ட பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் குறிப்பிட்ட தயிர் உட்பட அதன் தரம் குறித்து ஆய்வு செய்ததுடன் சந்தேகத்தின் அடிப்படையில் உடனடியாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் பி அறிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்தனர்.
இதன்போது தயிரின் நிலையைப் பார்வையிட்ட நீதிமன்ற நீதவான் சம்பந்தப்பட்ட விற்பனையாளரை கடுமையாக எச்சரித்ததுடன் சந்தேகத்திற்குரிய 58 தயிர் சட்டிகளையும் உடனடியாக அழிக்குமாறு உத்தரவிட்டார்.
குறித்த வழக்கானது மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி வரை ஒத்தி வைத்தார்.
அத்துடன் இது போன்று விதிமீறல்களில் ஈடுபட்ட 6 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அத்துடன் பொது மக்களை விழிப்புடன் இருக்குமாறும் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அதன் தரம் மற்றும் காலாவதித் திகதி குறித்து அவதானமாக இருக்குமாறும் சுகாதார தரப்பினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.



