குருக்கள்மடம் மனிதப்புதைகுழி குற்றப்பகுதியாக அறிவிப்பு – நீதிபதி நேரடி விஜயம்

குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு

பாறுக் ஷிஹான்-

1990ம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள்  ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு திங்கட்கிழமை(25) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் சார்பில் ஏ.எம்.எம்.ரவூப் என்பவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

அம்  முறைப்பாட்டின் பிரகாரம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை   திங்கட்கிழமை (25)களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள படி உரிய இடத்தில் புதைக்கப்பட்டுள்ள மனித எச்சங்களை தோண்டி எடுப்பதற்கான கட்டளை நீதிவான் நீதிமன்ற  நீதிபதி பிறப்பித்தார்.

முறைப்பாட்டாளர் சார்பாக குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலதிக நடவடிக்கைகளை களுவாஞ்சிக்குடி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில், களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இதன்போது நீதிமன்றம் சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களைத்தோண்டி எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், சம்பவ இடமான குருக்கள்மடம் கடற்கரை வீதியை சந்தேகிக்கப்படும் இடமாக அடையாளங்காட்டி  பொலிஸாருக்கு பாதுகாப்பு வலயம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், வழக்கு செவ்வாய்க்கிழமை  (26) காலை 9.30 மணிக்கு மீள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், குருக்கள்மடம் மனிதப்புதைகுழி அமைந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் பிரதேசத்தை களுவாஞ்சிக்குடி நீதவான் நேரடியாகச்சென்று பார்வையிட்டார்.