அறுகம்பே சபாத் இல்லத்தை அகற்றக்கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்

பாறுக் ஷிஹான்
 
பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத் இல்லத்தை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து ஏற்பாடு செய்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்று பிரதேச சபை முன்றலில் இடம்பெற்றது.


அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு இன்று தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்றபோது, இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டதுடன் கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.


அத்தோடு, உதவித் தவிசாளர் கொண்டு வந்த பலஸ்தீன மக்களுக்கு ஆதரவான பிரேரணை மீது உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் உரையாற்றும்போது தெரிவித்த கருத்தின் அடிப்படையிலேயே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


அரசே அறுகம்பை சபாத் இல்லத்தை உடன் அகற்று, இலங்கை அடுத்த பலஸ்தீனா?, இஸ்ரேலின் அடுத்த கொலனியாக இலங்கையை ஆக்க இடமளிக்காதே போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கு தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், உறுப்பினர்கள் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், சில்வா ஆகியோரும் ஊடகங்களுக்கு கருத்துக்களைத் தெரிவித்தனர்.