திருக்கோவில் நவதள இராஜகோபுர நிருமாணம் தொடர்கிறது! முருகனருளால் 4 ம் தளம் அடிக்கல் நடப்பட்டது!

( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கிலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்  108 அடி உயர நவதள இராஜகோபுரத்தின் நான்காம் தளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

முருகப்பெருமான் அருளால் இந்திய சுவாமி ராமானந்த சரஸ்வதி திருக்கோவிலுக்கு வருகைதந்து இப்பணிக்கு நிதியுதவி நல்கினார்.

அவரது உபயத்தில் இந்த நான்காவது தளம் அமைக்கப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்தில் எழுப்பப்படும் மிக உயர்ந்த முதலாவது நவதள இராஜகோபுரம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களாக தடைபட்டிருந்த அமைப்பு திருப்பணி வேலைகள் தற்போது தொடர்ச்சியாக நடைபெறுகிறது .

 பண்டைய காலத்தில் இராஜராஜ சோழனினால் இவ் ஆலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னொரு காலத்தில் “கந்தபாணத்துறை” என அழைக்கப்பட்ட திருக்கோவில் சங்ககாலம் மருவிய பின்பு திருக்கோவில் என அழைக்கப்பட்டது.

  ஆலயத்தின் மூலப்பொருளான 108 அடி உயரமான 9 தளங்களுடன் கூடிய இராஜகோபுரம் அடித்தளம் இட்டு இதுவரை காலமும் முற்றுப் பெறாத நிலையில் 33 அடி உயரத்தில் காணப்பட்டது.

அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அடுத்த கட்ட திருப்பணியை ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையிலான பரிபாலன சபையினர் கூட்டம் கூடி அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்திருந்தனர்.

அடிக்கல் நாட்டு வேலைகளை தொடங்கும் கிரியைகளை ஆலய  குரு சிவஸ்ரீ அங்குசநாதக் குருக்கள் நடாத்தினார்.

தொடர்ந்து ஆலயத் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் மற்றும் வண்ணக்கர் வ.ஜெயந்தன் செயலாளர் கே. செல்வராசா உள்ளிட்ட பரிபாலன சபையினர் கூடி திருப்பணி வேலைகளை ஆரம்பித்தனர்.

இதில் ஆலய நிர்வாகத்தினர்  வட்டார பிரதிநிதிகள்,ஊர்ப் பெரியோர்கள், புத்திஜீவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.