( வி.ரி.சகாதேவராஜா)

 வரலாற்று பிரசித்திபெற்ற மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிய ஆயிரம் வேல் பாதயாத்திரை இன்று(2) வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது.

வேலோடு மலை முருகன் ஆலய ஆதீனகர்த்தா முருக பக்தர் தியாகராஜா சுவாமிகள் தலைமையிலான 15 அடியார்கள்  வேல்சாமி மகேஸ்வரன் வழிகாட்டலில் மூன்றாவது வருட பாதயாத்திரையை விசேட  பூஜை சகிதம் ஆரம்பித்தனர்.

அவர்கள் நேராக சித்தாண்டி நாகதம்பிரான் ஆலயத்தையடைந்து  பின்னர் சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை சென்றடைந்தனர். 

 இன்று முதல் நாள் இரவு அடியார்கள் குழுவினர் கல்லடி பேச்சியம்மன் ஆலயத்தில் தங்குவார்கள். நாளை(3) வெள்ளிக்கிழமை களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் தங்குவார்கள்.

எதிர்வரும் 10 ஆம் திகதி உகந்தமலை முருகன் ஆலயத்தில் இருந்து சித்தர்கள் குரல் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ தலைமையில் 1000 வேல் தாங்கிய யாத்திரை கானகத்தில் இறங்கும். அவர்களுடன் இந்த தியாகு சுவாமிகளின் அணி இணையவுள்ளது.