( வி.ரி.சகாதேவராஜா)
ஈழவிடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா மற்றும் போராளிகளின் ஞாபகார்த்தமான 36வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு,காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை காரைதீவில் கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியை நடாத்தியது.
காரைதீவில் உணர்வு பூர்வமாக நடந்த தியாகிகள் தினத்தில்
தோழர் பத்மநாபா மற்றும் உயிர் நீத்த தோழர்களின் திருவுருவப் படங்களுக்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் 39 ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு, தோழர் பத்மநாபா சமூக சேவை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கழக தலைவர் வி.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு புலம்பெயர் வாழ் தோழர்களின் அனுசரணை வழங்கினர்.
நடாத்தப்பட்ட “தியாகிகள் தினம்” கிண்ணத்திற்கான கடின பந்து சுற்றுப் போட்டியின்
இறுதிப் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்திய காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் இத்தொடரின் சம்பியனாக தெரிவாகி கிண்ணத்தைக் கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து, இறுதி வரை போராடிய கல்லாறு விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
முதல்நாள், பத்மநாபா சமூக சேவை ஒன்றியத்தின் முக்கிய பிரதிநிதிகளாக லண்டனில் இருந்து தோழர் பாஸ்கரன் ( காரைதீவு ) ,தோழர் ஷிராப் (தம்பலகாமம்) அத்துடன் பிரான்சிலிருந்து தோழர் ஜோதி (கொக்கொட்டிச்சோலை )
ஆகிய மூன்று நண்பர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விடுதலை இயக்கத்தில் இருந்து உயிர் நீத்த சக தோழர்களின் நினைவு நிகழ்வில், அவர்களது உற்ற நண்பர்கள் மறக்காமல் புலம்பெயர் நாட்டில் இருந்து வந்து கலந்து கொண்டமை நட்புக்கும் தியாகத்திற்கும் ஒற்றுமைக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்தது.









