இன்று காரைதீவு பிரதேச சபை அமர்வில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மௌனஅஞ்சலி!

( வி.ரி.சகாதேவராஜா)

ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக காரைதீவு பிரதேச சபை மாதாந்த அமர்வில் இன்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் நான்காவது சபையின் பதினொராவது அமர்வு இன்று (14)    வியாழக்கிழமை காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற போதே இவ் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

அவர் தலைமை உரையாற்றுகையில் முள்ளிவாய்க்கால் அவலம் தொடர்பாக உரையாற்றி மௌன அஞ்சலிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதனையேற்று அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

அங்கு தவிசாளர் சு.பாஸ்கரன்  தலைமைமையுரையாற்றுகையில்..

இந்த வாரம் எமது ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை வாரமாக காணப்படுகின்றது. இந்த இனப்படுகொலை அதாவது இலங்கையிலே  எண்ணிக்கை அடிப்படையில் தமிழர்கள் சிறுபான்மையினராக காணப்பட்டாலும் அவர்களை அடக்கி ஒடுக்கி கடந்த அரசுகள் ஆட்சிகள் செய்து வந்தன. இன்று ஒரு சிறந்த ஆட்சியாக காணப்படுகிறது என்று கருதப்பட்டால் உண்மையாக இந்த அரசாங்கம்  எங்களுடைய வடகிழக்கில் சிறுபான்மை இனங்களான தமிழ் பேசும் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வு திட்டத்தை முன்வைக்க வேண்டும்.  அந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இறந்த ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென்றால் 

அவர்களுக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும்.

மேலும் புலம்பெயர் உறவுகள் இந்த யுத்தத்தில் ஊனமுற்றவர்களுக்கு உதவ வேண்டும். என்றார்.

உப தவிசாளர் எம் எச் எம். இஸ்மாயில் பேசுகையில்..

அண்மையில் சாய்ந்தமருதுக்கான நகர சபை தீர்மானம் உயர் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. தற்பொழுது எல்லை நிர்ணயம் செய்யப்படும் வேலை ஆரம்பமாக இருக்கின்றது.

இந்த நேரத்தில் சாய்ந்தமருதின் தென் புற எல்லையாகிய காரைதீவு பிரதேச சபையின் எல்லைகள் தீர்க்கமாக வரையறுக்கப்பட வேண்டும் . எந்த இடத்தில் இந்த அந்த தென்புற எல்லை இருக்கின்றன என்பதனை தவிசாளர் அறிவிக்க வேண்டும்.

 கடந்த வாரம் ஆர் கே எம் வீதியில் டெங்கு நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டிருக்கின்றார்.

இதனை மேலும் பரவாமல் தடுப்பதற்கு ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

சுமார் அரை மணி நேரத்தில் இந்த 11 வது அமர்வு நிறைவுற்றது.