அம்பாறை சேனனாயக்க சமுத்திர வான்கதவு எந்நேரமும் திறக்கப்படலாம்!
நீர்ப்பாசன பணிப்பாளர் எச்சரிக்கை
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை சேனனாயக்க சமுத்திர அணைக்கட்டின் வான்கதவு எந்நேரமும் திறக்கப்படலாம். எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
என்று நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் பொறியாளர் அஜித் கணசேகர எச்சரிக்கை அறிக்கையில் விடுத்துள்ளார்.
இவ் அறிக்கை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மாத்திரமே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரது அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது
கல்ஒயா ஆற்றின் மேல்பகுதி மற்றும் நடுப்பகுதியில் ஏற்பட்ட கனமழையால் இங்கினியாகல, அமைந்துள்ள சேனனாயக்க சமுத்திரம் அணையின் நீர்மட்டம் அதிகபட்ச கொள்ளளவிற்கு அருகில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பெய்த கடும் மழையால் அணையின் வான் கதவுகளை திறக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
அவ்வாறு திறக்கப்பட்டால் கல்ஒயா ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம் உருவாகும்.
எனவே ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அந்தப் பகுதிகளால் பயணம் செய்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக பின்வரும் பிரதேசங்களில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்:
தமன,அம்பாறை,இறக்காமம்,அட்டாளைச்சேனை,சம்மாந்துறை ,நிந்தவூர்,காரைதீவு, சாய்ந்தமருது ,கல்முனை,நாவிதன்வெளிதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் (ஒலுவில்) அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
.
தொடர்புடைய அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உடனடி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
