ஆதம்பாவா எம்.பி.யினால் கிராமிய வீதிகள் அங்குரார்ப்பண நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக மல்வத்தை-02 கிராம சேவகர் பிரிவில்  4.7 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புதுநகர் 01ஆம் குறுக்குத் தெருவை புனரமைப்புச் செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு (23) நேற்று சனிக்கிழமை சம்மாந்துறையில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்புப்பேரவை அங்கத்தவரும் அம்பாரை மாவட்ட கரையோரப்  பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்  தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ்வீதி வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ. முனாஸீர், மாவட்ட செயலக கணக்காளர் ஐ.எம். பாரீஸ், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான வை.வி.எம். நவாஸ், எஸ். டனோஜன், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.