சிறப்பாக நடைபெற்ற  திருக்கோவில் சித்திர வேலாயுதசுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம்.

(வி.ரி.  சகாதேவராஜா)

 வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவ திருக்கொடியேற்ற நிகழ்வு நேற்று முன்தினம் (07)  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில், 

ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் ஒத்துழைப்பில் கொடியேற்ற உற்சவம் 12.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ்  தலைமையிலான பரிபாலன சபையினர், மற்றும் ஆயிரக்கணக்கான கந்தன் அடியார்கள்  கலந்து கொண்டனர்.

இந்த உற்சவம் 18 நாட்கள் நடைபெற்று   இம் மாதம் 24ஆம் தேதி சமுத்திர தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது. 

 இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களால் சிறிய கோயிலாக அமைக்கப்பட்டு பின்பு இராஜராஜ சோழர் காலத்தில் கற்கோயில் அமைக்க பெற்று நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டு ஆடி அமாவாசை உற்சவமும் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமும் பகலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படவிருக்கிறது.

பிதிர்க்கடன் செலுத்துகின்ற ஆடி அமாவாசை உற்சவம் என்பதால் இம்முறை பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதற்காக  முன்னேற்பாடுகள்  செய்யப்பட்டிருப்பதாக ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ்   மேலும் தெரிவித்தார்.