P.S.M
பல்வேறு தேவைகள் நிறைவேற்றப்படாத நிலையில் பல்வேறு திட்டமிடப்பட்ட நெருக்கடிகளை சந்சித்து வரும் தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமானது ஒற்றுமையான செயற்பாடு. குறிப்பாக இளம் தமிழ்த் தலைமைகள் ஒரு இலக்கை நோக்கி கருத்தொற்றுமையுடன் செயற்ட வேண்டும் அதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தமிழ் மக்கள் நெருக்கடிகளை அதிகம் எதிர்கொள்ளும் அம்பாறை மாவட்டத்தில் இளம் தமிழ் தலைமைகள் ஒருபுள்ளியில் இணைந்து செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களினால் அதிகம் அறியப்பட்ட அளம் தமிழ் அரசியல் தலைமைகளான திருக்கோவிலில் ஒரு மாற்றத்திற்கான முதற்புள்ளியை வைத்த தவிசாளர் சு. சசிகுமார் மற்றும் காரைதீவின் முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு அவசியம் களையப்பட வேண்டியதாகும்.
அண்மையில் முன்னை நாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், திருக்கோயில் பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான சங்கத்தினால் நடத்தப்பட்ட,எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அல்லது விழிப்புணர்வு நிகழ்வில், கலந்து கொண்டிருந்தார்.
தமிழ் பிரதேச மக்களின் பிரதிநிதியாக எந்தவித பிரதேச வேறுபாடுகளுமின்றி, மக்களுக்காக, அவர்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் முகமாக கலந்து கொண்டு இருந்தார் என்பதும் உண்மை. இவ்வேளையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக ஓர் துன்பியல் சம்பவம் நடந்துள்ளது.
அவ்வேளையில் தவிசாளர் ஜேயசிறில் தான் மக்கள் மீது கொண்ட உணர்வு காரணமாகவும், தமிழன் என்ற உணர்வுடனும், விடாப்பிடியாகவும் உணர்வு பூர்வமாகவும், தனது சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கியிருந்தார்.
மறு தரப்பில் திருக்கோயில் பிரதேச சபையின் நிகழ்கால தவிசாளரும், மக்கள் சேவகனும், சமூக சேவையாளரும், தன்னை குறுகிய காலத்தில் ஒரு மகத்தான தலைமைத்துவமாக மக்கள் ஆணையைப் பெற்று பெரும்பான்மை வெற்றியை தன்னகத்தே கொண்ட சுந்தரலிங்கம் சசிகுமார் தவிசாளர், கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் மூலம் மக்கள் மீது கொண்ட அக்கறையில், ஒரு சிறந்த தலைமைத்துவத்தின் கருத்தாளமிக்க அமைதியான கருத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இரு தரப்பும் தங்களின் கருத்துக்களின் படியும், மனச்சாட்சிகளின் படியும், மக்கள் மீது கொண்ட அக்கறையையும், சிறந்த தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தும் விதமாக வெளிப்படையான தெளிவான கருத்துக்களை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
இரு தரப்பிற்கும் இடையில் ஓர் பரஸ்பர கருத்தாடல் இல்லாமையே இவ்வாறான ஒரு சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளதை, நாம் உணரக்கூடியதாக இருக்கின்றது.
மக்கள் மீது அக்கறை கொண்ட இரு தலைமைத்துவங்கள், மக்களுக்காக தங்களது நோக்கங்களை பேசி சமரசமாக, இதை விட ஆக்கப்பூர்வமாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டிய வாய்ப்பிருந்ததையும் உணரக்கூடியதாக உள்ளது.
இதனால் உண்மையில் பாதிக்கப்பட்டது மக்கள், எமது சமூகம் என்பதை இருவரும் உணர வேண்டும்.உணரக்கூடிய பக்குவம் கொண்டவர்கள் என்பதில் ஐயமுமில்லை.
மற்றும் இந்த முரண்பாட்டினால் தாங்கள் இருவரினாலும் மக்களுக்கு ஏற்பட இருந்த, இருக்கும் பல வரப்பிரசாரங்கள் மளுங்கடிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுகின்றது.
இவ்வேளையில் நாம் கூறக்கூடிய சில கருத்துக்கள்.
தலைமைத்துவம் என்பது தகுந்த நேரத்தில் மக்களுக்காக ஆவேசம் கொண்டு ஒரு தலைவன் என்ற ரீதியில் கருத்தாடுவதும்,
அமைதியாக கருத்து முரண்பாடுகளை வெளிப்படுத்தி தீர்வு காண்பதும்தான்.
இவ்வாறான ஆற்றல் கொண்ட இருவரும் இணைந்து செயற்பட்டால், இன்னும் சிறப்பாக இருக்கும் என புரிந்து கொள்கிறோம்.
அத்துடன் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய சதிகளையும் எடுத்துக் கூறாமல் விட்டால் இது நாம் விட்ட வரலாற்று தவறாக அமையலாம்.
பாரதக் கதையில் கர்ணன் ஓர் முக்கிய பாத்திரம் என்று தெரிந்த கிருஷ்ணர் அவருடைய பலத்தை வலுவிழக்கச் செய்ய 10 சதிகளை செய்து முடிக்கின்றார். இதனால் கர்ணன் தன் தானதர்ம பலன் தவிர்ந்த, பெற்ற அனைத்து வரங்களும் செயலிழந்து விட்டது.
இந்த எடுத்துக்காட்டை சிரமேல் கொண்டு தாங்கள் இருவரின் பலங்களும், இலங்கை வாழ் தமிழ் மக்களின் எதிர்காலத்தில் ஒன்றித்து உதவ வேண்டும்,
உதவும் என்ற நம்பிக்கையோடும்,சிறந்த கருத்தாடல் இன்றி இடம் பெற்ற இச்சம்பவத்தை மறந்து, இருவரும் கட்சி வரையறைக்கு அப்பால் இணைந்து செயல்பட வேண்டும் என்ற மக்கள் சார்பான எதிர்பார்ப்பையும் முன்வைக்கின்றோம்.