தாறுள் இல்மு கல்லூரியின் பட்டமளிப்பு விழா; 225 மாணவர்கள் கெளரவிப்பு.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த ஒரு தசாப்த காலமாக வெற்றிகரமாக இயங்கி வருகின்ற தாறுள் இல்மு கல்லூரியின் வருடாந்த பட்டமளிப்பு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்  சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை (27) மாலை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

கல்லூரி முதல்வரும் கல்முனை கல்வி வலய ஆசிரிய ஆலோசகருமான ஆதம்பாவா றாஸிக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அத்துடன் கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.எச்.றியாஸா, LCBC நிறுவன பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.ஜவாஹிர் மற்றும் ICAM அபாகஸ் நிறுவன பணிப்பாளர் திரு. ரீ.எம்.ஷாபி ஆகியோர் கௌரவ அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஆங்கில எலகியுஸன், சிங்கள எலகியுஸன், சதுரங்கம், அபாகஸ் போன்ற பாடநெறிகளின் இறுதிப் பரீட்சைகளில் திறமையாக சித்தியெய்திய சுமார் 225 மாணவர்கள், அதிதிகளினால் விருதுகள், பதக்கங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந்தியாவில் சென்னை நகரில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் வெற்றிபெற்று முதலாம் இடங்களைப் பெற்ற மூன்று மாணவர்கள் உட்பட நான்கு மாணவர்களும் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற அபாகஸ் 7வது தேசிய மட்டப் போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களையும் மற்றும் ஆறுதல் பரிசையும் வென்ற 38 மாணவர்களும் இதன்போது  கௌரவிக்கப்பட்டனர்.

அபாகஸ் பாடநெறியின் 5 மட்டங்களையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்த 17 மாணவர்களுக்கான பட்டமளிப்பும் இடம்பெற்றது.

மேலும், அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற அபாகஸ் புத்தாக்க நிகழ்நிலைப் போட்டியில் பங்குபற்றிய 10 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், தங்கப் பதக்கம் வென்ற மாணவி பதக்கம் அணிவித்து கெளரவிக்கப்பட்டார்.