பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் நீண்ட தொடர் கோடை வெப்பத்தின் பின்னர் திடீர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் சுழல் காற்று, மின்னல் வெட்டு , கடல் கொந்தளிப்பு என்பனவும் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.
மேலும் இன்று(11) மாலை பல்வேறு இடங்களில் குறித்த மழை காரணமாக மரங்கள் உடைந்துள்ளதுடன் பலத்த காற்று காரணமாக சிறு சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை,அக்கரைப்பற்று,நிந்தவூர்,காரைதீவு,மாவடிப்பள்ளி ,சாய்ந்தமருது,பாண்டிருப்பு,கல்முனை ,நாவிதன்வெளி,மருதமுனை,பெரியநீலாவணை ,மல்வத்தை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.
மேலும் மேற்குறித்த பகுதியில் பெய்த கனமழை மற்றும் கடும் காற்று அழுத்தத்தால் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டதுடன் மின்னல் வெட்டினால் அச்ச நிலைமை ஏற்பட்டிருந்ததை காண முடிந்தது.
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் திடீர் கனமழையால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகள் பலவும் நீரில் மூழ்கி வருகின்றன.மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ் நிலப் பிரதேசங்கள், வீடுகள், வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கக் கூடிய அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக வீதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன் பிரதான வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதுடன் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.










