எனது நகை அனுபவத்தில் இவ்வாறானதொரு விலை உயர்வை ஒருபோதும் கண்டதில்லை.! நாம் பழைய நகைகள் வாங்குவதை நிறுத்தி உள்ளோம் என்கிறார் கல்முனை சொர்ணம் குணா

(வி.ரி.சகாதேவராஜா)

எனது நகை வியாபார அனுபவத்தில் சமகாலத்தில் ஏற்படுவது போன்று ஒரு பாரிய அதிகரிப்பும்  அதிகூடிய விலையையும் ஒருபோதும் நான் வாழ்க்கையில் கண்டதில்லை .

இவ்வாறு கிழக்கின் பிரபல சொர்ணம் நகை மாளிகையின் கல்முனைப் பிராந்திய முகாமையாளர் கோ. குணபாலச்சந்திரன் (குணா) தெரிவித்தார் .

தங்க விலை நாளுக்கு நாள் கிடுகிடுவென்று உயர்ந்து வருவதை ஒட்டி அவரிடம் கேட்ட பொழுது அவர் இவ்வாறு சொன்னார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்..

தற்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை மூன்று லட்சத்து 70 ஆயிரம் ரூபா . 2 நாட்களுக்கு முன்பு மூன்று லட்சத்தி 47 ஆயிரமாக இருந்தது . கடந்த இரு நாட்களில் இவ்வாறான திடீர் அதிகரிப்பு இடம்பெற்று இருக்கின்றது .

இதனால் எமது நகை வியாபாரமும் கணிசமான அளவு பாதிக்கப்பட்டு இருக்கின்றது.

 அதைவேளை பழைய நகைகளை கொள்வனவு செய்கின்ற நடைமுறையை நாங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம் . எதிர்வரும் நாட்களில் ஒரு பவுண் தங்கம் நான்கு லட்சம் ரூபாய் வரை உயரும் என்று கூறப்படுகின்றது. சீன நாட்டின் ஆதிக்கமே இதற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. என்றார்.

திருமணம் தொடக்கம் இன்னொரன்ன தேவைகளுக்கு தங்கம் கொள்வனவு செய்யும் பொது மக்கள் செய்வதறியாது திண்டாடுகின்றனர்.