கவிஞர் றோஷன் அக்தரின் ‘யாருமற்ற மதியம்’ கவிதை நூல் வெளியீடு
ரவூப் ஹக்கீம் எம். பி பிரதம அதிதியாக பங்கேற்பு
பாறுக் ஷிஹான்-
முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியும் கவிஞருமான றோஷன் அக்தர் எழுதிய ‘யாருமற்ற மதியம்’ எனும் கவிதை நூலின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (26) மாலை கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.
கல்முனை அனுசரி இலக்கிய வட்டத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதர் உட்படப் பல அரசியல்வாதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன், அப்துல் றஸாக், மன்சூர் ஏ. காதிர், எம்.எஸ்.எம். ஜமீல், நபீல் மற்றும் கதீர் ஆகியோர் நூல் பற்றிய ஆய்வுகளையும் மதிப்பீட்டு உரைகளையும் வழங்கினர்.
இக்கவிதை நூல் இலக்கியச் செழுமை, சிந்தனைத் தெளிவு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் சிறந்த படைப்பாக அமைந்துள்ளதாக உரையாற்றியோரும் கலந்துகொண்டோரும் கருத்துத் தெரிவித்தனர். அத்துடன் நூலாசிரியர் றோஷன் அக்தரின் இலக்கியப் பணி தொடர்ந்து சிறக்கத் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.













